Skip to main content

பிறழ்வு - கதை 3

கட்டிடம் நான்காவது மாடியாக வளர்ந்து கொண்டிருந்தது.
எலும்புக் கூடு நிற்பதைப் போல மொத்தமாக சிமென்ட் தூண்களும் தளங்களும் மட்டும் முடிந்திருந்தன. அடிப்படை கட்டுமான வேலைகளை முடித்துவிட்டுதான் சுவர் கட்டத்தொடங்குவது என்பது முடிவு. செங்கற்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவு இல்லாவிட்டலும், அடுத்த மாதங்களில் இன்னும் விலையும் தட்டுப்பாடும் குறையலாம் என்பதால் இன்னும் சுவர்வேலைகளை தொடங்கவில்லை

தண்ணீர்விட்டுத் தேக்கியிருந்த தளத்தில் நிற்பது நன்றாக இருந்தது. அந்தி சூரியன் நகரின் பின்புலத்தில் தன் வர்ணஜாலங்களை தொடங்கியிருந்தான். மனப்பாடமாக இருந்த ஆதித்யஹிருதய பாடல்களை, ஒன்றிரண்டுதான் தெரியும். சொல்லத் தொடங்கினேன். எதிரிகளை சமாளிக்க இந்த ஸ்லோகங்கள் உதவும் என்று மோகன் கேட்டுக் கொண்டே இருப்பான். கட்டிட பொருட்கள் வாங்க சீனா போயிருக்கிறான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, ஆனாலும் ஸ்லோகத்தில் இருந்த வசீகரத்திற்காக சொல்வேன்.

வேலையாட்கள் தரைதளத்தில் மோட்டாரை இயக்கிவிட்டு உடல் கழுவிக் கொண்டிருந்தார்கள். சூர்யதாசுக்கு நாளைய வேலைகளை ஒப்படைக்க வேண்டும். அடுத்த வேலைகளில் அவன்தான் மேஸ்திரி என்று ஆசைக் காட்டியிருந்தேன். அவனுக்கு என்னன்ன நினைவுபடுத்த வேண்டும் என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவன் ஒற்றை ஆளாக இந்த கட்டிடத்திலேயே தங்கியிருக்கிறான். அவனில்லாவிட்டால் நான் நிச்சயம் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், இப்போது மேஸ்திரியின் வேலைகளை செய்தாலும் அவன் கொத்தனார்தான். இரண்டு மாதங்களாக ஊருக்கு போகவிடாமல் இழுத்துவைத்திருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்கள் அனுப்ப முடியாது. போனால் பதினைந்து நாட்களுக்கு குறைந்து திரும்பமாட்டான்.

ஒவ்வொரு மாடியாக ஆராய்ந்து கொண்டே இறங்கிவந்தேன். திருப்தியான வேலை. ஆனால் இது தொடக்கம்தான். இனிமேல்தான் நிறைய தலைவலிகள் இருக்கின்றன. இரண்டாவது மாடியில் மணல்குவியலின் பின்னே சூரியதாஸ் தூரத்தில் வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனை தொந்தரவு செய்யாமல் கீழே இறங்கினேன். தெரு தொடங்கும் நெடுஞ்சாலையின் எதிர் வரிசையில் டீக்கடை நோக்கிப் போனேன்.

சூரியதாசிடம் சொல்ல வேண்டியவை மனதில் அடுக்கப்பட்டு, கட்டிட உரிமையாளரிடம் சொல்ல வேண்டியவையும் சரிபார்த்தபடி டீயை முடித்தேன். கட்டிடம் தன்னை உருவாக்கும் பிரம்மாக்கள் நீங்கியதால் அமைதியாகியிருந்தது. சூரியதாசை கீழே அழைக்காமல் அவன் இருந்த இடத்துக்கே போனேன். சூரியன் ஆபத்தான அளவுக்கு கீழே இறங்கியிருந்தான், அடுத்து எங்கோ விழுந்துவிடுபவன் போல, செஞ்சிவப்பாக, ரத்தப் பொட்டாக....
பனைமரங்களின் உச்சி நேர் கோட்டில் சூரியன் நின்றிருந்தான்.

சூரியதாஸ் இன்னும் சூரியனையே வெறித்தபடிதான் இருந்தான். நான் மணல் மேட்டின் உச்சியில் அமர்ந்தேன். என் அரவம் அவனை தொடவில்லை போல என்று செருமினேன். பிறகுதான் கவனித்தேன். தன் கைகளில் இருந்த உறுப்பை கைலியை இழுத்து மூடினான். கைகளை மணலில் தேய்த்தான். எதிரில் பனைமரங்களின் ஊடாக தெரிந்த சூரியனைக் காட்டி "அதை பார்த்தால் ஒரு யோனி போல இருக்கு சார்" என்றான்.

Comments

Popular posts from this blog

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

நினைவுப்பாதை, நகுலன்

நாம் முக்கியம் என்று நினைப்பதெல்லாம் அப்படி முக்கியமில்லை என்று நினைக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்று நமது பிரச்சனைகளெல்லாம் பைசலாகிவிடும். ஆனால் இப்படியெல்லாம் சொல்வதெளிது. செய்வதரிது. அவர் அடிக்கடி ஒரு உதாரணம் சொல்வார். உனக்கு வேண்டிய ஆனால் அவசியமில்லாத ஒன்று கைமறதியாக வைத்துவிட்டதால் கிடைக்கவில்லை. அது அப்படியே தொலைந்துப் போனாலும் பெரிய நஷ்டமுமில்லை. விவேகப் பூர்வமாக இனிமேல் சற்று ஒழுங்காக இருக்க வேண்டுமென்பதும், இந்த விஷயத்தை மறந்துவிடவேண்டும் என்பதும்தான் ஞானம். ஆனால் முக்கால்வாசிப் பேர்களும் இப்படியெல்லாம் மனம் உழல்வதால் தாங்களும் உழல்வார்கள். மனோதத்துவம் படித்துபடித்து நமக்குப் பிரச்சனைகள்தான் பிரச்சனைகளின் பரிகாரத்தைவிட முக்கியமாகப்படுகிறது என்பார். ~ நினைவுப்பாதை, நகுலன்

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்