Skip to main content

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது. 

அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்தர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது.

அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரைவிட கொழுத்த அந்த நபர் டீக்கடை உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பறிமாறிக் கொண்டிருந்தார்.

Comments

Popular posts from this blog

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும் அருகிலிருக்கும் ஆபத்து மதிமயக்கும் மாயா பணம் உறிஞ்சும் அட்டை  குணம் மாற்றும் நெருப்பு குடிதாக்கும் இடி தீண்டல் அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம் அவள் அரவணைப்பில் மீளாச் சிலரும் என் சிநேகம் பேய்வீட்டில் வாழநேர்ந்த மருமகள்போல தமிழ்த்திருநாட்டில் குடிக்காதவர்கள் ஒவ்வொருநாளும் அவளைக் கண்டும் காணாத ரிஷிபோலக் கடக்கையில் தெய்வப் பிரசாதம் என தருகிறார்கள் ஒருமடக்குச் சாராயம் வா விஸ்வாமித்ரா என உள்ளும் புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை எனக்குள்.