Skip to main content

பிறழ்வு - கதை 1

மென்மையான குரலில் "நீங்கள் ஏன் இறந்து போய்விட கூடாது" என்று கேட்டேன். அதன் அர்த்தம் அவருக்கு உடனே புரிந்தாலும் சற்று தாமதமாக பதில் சொன்னார்.

"என்ன பிரச்சனை வந்தாலும் ஒருவன் இறந்துவிட வேண்டியதில்லை என்பதுதானே நீ எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் செய்தி. ஏன் என்னிடம் மட்டும் இப்படி கேட்கிறாய்" என்றார்.

"பிறர் வேறு. அவர்களை நான் நல்வழிப்படுத்த வேண்டியுள்ளது. அவர்கள் கொஞ்சம் பிரயோசனமான வாழ்கையை வாழ்கிறார்கள். உங்களைப் போல அல்ல. நீங்கள் மிகவும் பழைய மனிதர். நீங்கள் செய்வது எதுவும் சரியாக செல்லவில்லை. இத்தனை தோல்வியுடன் நீங்கள் வாழ்வது சரியல்ல."

கண்ணாடியில் பிரதிபலித்த கண்களின் ஈரம் கண்ணீராகவும் இருக்கலாம். நான் சொல்ல வேண்டியதின் மிக முக்கியமான செய்தியை சொன்னேன்.

"மேலும், உங்களை சகித்துக் கொள்வது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. உங்களால் நான் அடையும் மன உளைச்சல் மிக அதிகம். உங்கள் மூலம் நரகம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அறைக்கு வந்து சேருகிறது."

அவரிடம் நான் சில சிறு விஷகுப்பிகள், வசீகரமான கண்ணாடியில் பிரதிபலிப்பு உள்ள திரவமுடையவை, அந்த அறையில் இருப்பதை சொன்னேன். பிறகு அவர் இறப்பது எனக்கு மகிழ்ச்சி தரப் போவது இல்லை என்று சொன்னேன். நான் விடுதலையை கோரி்தான் அவருக்கு இந்த சந்தர்பத்தை ஏற்படுத்தியதை மன்னிப்பு கேட்கும் விதத்தில் விளக்கினேன். அவருக்கு அனைத்தும் புரிந்தது. அமைதியாக என் படுக்கைக்கு திரும்பினேன். அவர் என்ன செய்கிறார் என்பதை மறந்து நான் தூங்கினேன்.

அந்த அறையில் பிணம் நாறுவதை உணர்ந்து என் அண்டை வீட்டுக்கார்கள் எவரேனும் தகவல் சொல்லி என்னை வந்து சுத்தம் செய்துவிட்டு போகலாம். கடைசியாக ஒரு முறை அவர்களுக்கு அந்த துன்பத்தை தருவதை கடவுள் மன்னிக்கட்டும். இறக்கப் போவது அவரோ நானோ, ஆனால் பிறகு நாங்கள் இருவரும் இந்த பூமியில் இருக்கமாட்டோம்

Comments

Popular posts from this blog

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

நினைவுப்பாதை, நகுலன்

நாம் முக்கியம் என்று நினைப்பதெல்லாம் அப்படி முக்கியமில்லை என்று நினைக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்று நமது பிரச்சனைகளெல்லாம் பைசலாகிவிடும். ஆனால் இப்படியெல்லாம் சொல்வதெளிது. செய்வதரிது. அவர் அடிக்கடி ஒரு உதாரணம் சொல்வார். உனக்கு வேண்டிய ஆனால் அவசியமில்லாத ஒன்று கைமறதியாக வைத்துவிட்டதால் கிடைக்கவில்லை. அது அப்படியே தொலைந்துப் போனாலும் பெரிய நஷ்டமுமில்லை. விவேகப் பூர்வமாக இனிமேல் சற்று ஒழுங்காக இருக்க வேண்டுமென்பதும், இந்த விஷயத்தை மறந்துவிடவேண்டும் என்பதும்தான் ஞானம். ஆனால் முக்கால்வாசிப் பேர்களும் இப்படியெல்லாம் மனம் உழல்வதால் தாங்களும் உழல்வார்கள். மனோதத்துவம் படித்துபடித்து நமக்குப் பிரச்சனைகள்தான் பிரச்சனைகளின் பரிகாரத்தைவிட முக்கியமாகப்படுகிறது என்பார். ~ நினைவுப்பாதை, நகுலன்

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்