Skip to main content

யாழினி

கூடலுக்குப் பின்
கொஞ்சநேரம் பேசவேண்டும்
உனக்கு

விலக்க முனைகையில்,
இரு, ஒருவருக்குள் ஒருவரை
கடத்திகொண்டிருக்கிறேன்
என்றாய்.

அதான் ஆயிற்றே என்றேன்

பிறிதொரு நாளில்
எனக்கு அப்பாவாக
அம்மாவாக
மகனாக
மகளாக
பிறந்து வாயேன்
என்றாய்.

வீட்டின் திரைச்சீலையை
கடந்து வருவதைப்
போல எளிதா என்றேன்

பூங்கா புல்வெளியில்
உரையாடிக் கொண்டிருக்கையில்,
என்னைவிட்டு மரணித்து விடாதே
என்றாய்

வழமையான தொனியில்
பதில் சொல்லத்
தொடங்குகையில் என்
வாயைப் பொத்தினாய்

யாழினி... இனிய.. யாழினி.

கூடத்தில் உன்னை
மாலையிட்டுக் கிடத்தியிருந்த நாளில்
நீ எனக்குச் சொன்ன எதையும்
நான் உனக்கு சொல்லாமல் விட்டேனே
என்ற துக்கத்தில் அழுதேன்.

Comments

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பேய்கதை

பூமிகா வாசலில் அமர்ந்து மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா குட்டிப் பெண்ணுக்கு ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். "அம்மா அம்மா, பேய் கதை ஒண்ணு சொல்லுமா"  உடனே, மரகிளைகள் குரங்குகள் நடப்பதைப் போல சலசலத்தது. அம்மா நிமிர்ந்து பார்த்தாள். கிளைகள் மட்டும் குலுங்கின. யாரும் இல்லை. "இப்போ வேணாண்டி. இரவில் நீ பயந்துக்குவே, சாமி கதை சொல்றேன்" என்றாள் டல்லடித்த பேச்சிலர் இளைஞர்களைப் போல சப்தமின்றி கிளைகள் அமைதியாகிவிட்டன.