Skip to main content

பேய்க் கதை - நண்பன்

ஒருத்திக்குத் தன்னுடைய கணவன் மீது மிகுந்த காதல் என்றாலும், அவனுடைய நண்பன் ஒருவன் மீது எரிச்சல். எதை பேசினாலும் உங்கள் நண்பரிடம் இதையெல்லாம் சொல்லாதீர்கள் என்பாள். இவனும் தலையாட்டிவிட்டு ஆனால் தன் நண்பனிடம் சொல்லிவிடுவான். தான் சொல்லியும் கணவன் நண்பனுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறானே என்று கோபம் அவளுக்கு. 

அன்று கணவனுக்கு தோசை வார்த்துப் போட்டுக்கொண்டே அவளின் தம்பியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். பின்னர் வழக்கம் போல, "இதையாவது உங்கள் நண்பரிடம் போய் சொல்லாதீர்கள்" என்று சொன்னாள்.

அந்த நேரம் சரியாக நண்பன் போனில் அழைத்தான். இவனும் பேச்சு வாக்கில் தன் மச்சினன் விஷயத்தை சொல்லிவிட்டான். மனைவி வெறியாகி, தோசைக்கரண்டியுடன் கணவன் மீது பாய, கணவன் நகர்ந்து தப்பித்துக் கொண்டான். அப்போது அவன் பேசிகொண்டிருந்த போன் கீழே விழுந்துவிட்டது. மனைவி கடுப்பில் போனை தோசைக்கரண்டியால் நாலு சாத்து சாத்தி உடைத்துவிட்டாள்.

மறுநாள் அவளுடைய கணவன் தன் நண்பனை சந்திக்கப் போனான். அவன் முகத்தில் பலத்த அடிபட்டு, கட்டும் போட்டிருந்தான். என்னடா ஆச்சு என்று விசாரித்தால், "என் வீட்டில் தோசைக்கரண்டி கீழே கிடந்திருக்கிறது. நேற்று உன்னிடம் போனில் பேசிக்கொண்டே கவனிக்காமல் அதில் காலை வைத்தேனா, வழுக்கிவிழுந்து அடிபட்டுக் கொண்டேன்" என்றான்.

அன்றிலிருந்து கணவன் பேய்களை நம்பத் தொடங்கிவிட்டான்.

Comments

Popular posts from this blog

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும் அருகிலிருக்கும் ஆபத்து மதிமயக்கும் மாயா பணம் உறிஞ்சும் அட்டை  குணம் மாற்றும் நெருப்பு குடிதாக்கும் இடி தீண்டல் அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம் அவள் அரவணைப்பில் மீளாச் சிலரும் என் சிநேகம் பேய்வீட்டில் வாழநேர்ந்த மருமகள்போல தமிழ்த்திருநாட்டில் குடிக்காதவர்கள் ஒவ்வொருநாளும் அவளைக் கண்டும் காணாத ரிஷிபோலக் கடக்கையில் தெய்வப் பிரசாதம் என தருகிறார்கள் ஒருமடக்குச் சாராயம் வா விஸ்வாமித்ரா என உள்ளும் புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை எனக்குள்.