Skip to main content

கடவுளின் கதை - சுயம்பு

(Caution: கடும் இலக்கியத் தரத்துடன் :) )

காலத்தின் முதல் புள்ளிக்கு முன் எதுவுமற்று இருந்தது. அண்டம் இல்லை.  காலம் இல்லை. அசைவு இல்லை. வெளிச்சம், இருள், சப்தம்,  நிசப்தம், வாசனை, சுவை, கடவுள், பேய் எதுவுமில்லை.

யுகங்கள் என்று எதுவும் இல்லாதபோதே, கோடி கோடி யுகங்கள்  கடந்த சூன்யம், அதன் நிச்சலனம் தன் பிரக்ஞை உணர்ந்த  நொடியில் காலம் தோன்றியது.  காலம் தோன்றிய அந்த புள்ளியில் கடவுளும் தோன்றினார்.

பிரக்ஞையின் முதல் புள்ளிதான் கடவுள்.  கடவுளுக்கும் 'தான்' இருக்கிறோமா இல்லையா என்ற மயக்கம்.  'தான்' என்று தோன்றிய முதல் அணு, அல்லது அண்டத்தின் முதல் துகள் கடவுளே,  பூரணமடையாத கடவுள்.

கடவுளுக்கு முதலில் தோன்றிய எண்ணம், தான் தனியாயிருக்கிறோம் என்பதே.  தன்னை சூழ்ந்த நிச்சலனமும், சூன்யமும் கடவுளுக்கு துக்கமாயிருந்தது.  அந்த துக்கம் நீண்டகாலம் தொடர்ந்து இருந்தது.  கடவுள்  தனிமையில் செயலற்று இருத்தல் காலத்தை உறைய வைத்தது.

தன் தனிமையை பொறுக்காத கடவுள், தனக்குத்தானே கவனிக்கத் துவங்கினார்.  அவருக்கு புலன்கள் தோன்றின, உணர்வுகள் தோன்றின, மொழி தோன்றியது.  அதன் மூலம் எதுவுமற்ற கடவுள், தனக்குதானே பேசிக்கொள்ளத் தொடங்கினார்.

அப்படிதான் ஆதியில் கடவுள் கதைசொல்லியாக இருந்தார்.  தனக்குதானே தன் தனிமையை போக்க அவர் கதை சொல்லிகொள்ளத் தொடங்கினார்.  கடவுளின் மனம் போன போக்கில் கதை, கதை போன போக்கில் படைப்பு.  உலகம், உயிர்கள், மனிதர்கள், நேற்று, நாளை எல்லாமே அவன் கதையின் அத்யாயங்கள்.

அவரின் கதையில், பிரபஞ்சத்தில் சௌந்தர்யம் மட்டுமே இருந்தது.  அழகற்றது எதுவும் இல்லை. ஞாபகங்கள், துன்பங்கள், அழிவு, பசி, பிணி, பொறாமை என்று எதிர்மயையானது எதுவுமற்று அனைத்தும் மந்தத் தன்மையுடன் இருந்தன.  பூமியைப் படைத்தபோது பூமிக்கு ஈர்ப்புத்தன்மை இல்லை.

மேகம் மிதப்பது போல பூமியின் பொருட்களான மலை, நதி, வனம், கடல், சமவெளி அனைத்தும் அந்தரத்தில் மிதந்தன.  அந்த வெளியில் கடவுள் நீந்தி செல்கையில், நுகர நறுமணப் பூக்களையும், பல்வேறு பூக்களின் வாசத்தைக் கலக்கச் செய்ய தென்றலையும் உருவாக்கினார்.  உருவாக்குதல் ஒன்றும் அவருக்கு கடினாமாக இல்லை.  தனிச்சையாக கற்பனை செய்தால் போதும்.  தனக்குத் தானே சொல்லிகொள்ளும் கதை நிஜமாக நடக்கும். 

Comments

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பேய்கதை

பூமிகா வாசலில் அமர்ந்து மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா குட்டிப் பெண்ணுக்கு ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். "அம்மா அம்மா, பேய் கதை ஒண்ணு சொல்லுமா"  உடனே, மரகிளைகள் குரங்குகள் நடப்பதைப் போல சலசலத்தது. அம்மா நிமிர்ந்து பார்த்தாள். கிளைகள் மட்டும் குலுங்கின. யாரும் இல்லை. "இப்போ வேணாண்டி. இரவில் நீ பயந்துக்குவே, சாமி கதை சொல்றேன்" என்றாள் டல்லடித்த பேச்சிலர் இளைஞர்களைப் போல சப்தமின்றி கிளைகள் அமைதியாகிவிட்டன.