Skip to main content

கூடடைதல்

கவனித்துக் கொண்டிருக்கும்போதே
நிழல்கள் கரைந்து
இருளோடு கலந்துவிடும்
கந்தாலா மலைகிராமத்தில்
அந்திச் சூரியன் சுறுசுறுப்பானது
விரைந்து மறையக் கூடியது

மலைச்சரிவு வனாந்திரத்தில்
அசட்டையுடன் தனியனாக
உங்கள் நிழலை
தொலைத்தவுடன் நீங்கள்
பயம் கொள்கிறீர்கள்

ஓடை சலசலப்பு
முகத்தில் மோதும் பூச்சிகள்
பறவைகள் எழுப்பும் சப்தங்கள்
காலில் மிதிபடும் வினோத மிருதுத்தன்மை

யாவும் பகலிலும் இருந்தவைதான் என்பதை
ஞாபகபடுத்த எவருமற்ற தனிமையில்
உங்கள் பயங்கள் பெருகுகிறது.

உங்கள் உறங்குமிடம் செல்லும் பாதை
இரட்டிப்பாக நீண்டுவிட்டது

கிறுக்குத்தனமான தைரியம்
கிறுக்குத்தனமான பயம்

உங்களுக்கு உதவி கிடைக்கிறது
பழகியறியாத, நாகரீகமற்ற
எதிர்படும் மலைவாசியை உங்களுக்கு
பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது

உங்கள் இடத்துக்கு
அவன் கைகாட்டும் திசையை
நம்புகிறீர்கள்

இன்னும் சிறிது தூரம்,
கூடடைந்த பிறகு பாதுகாப்பில்
இருளும், உலகமும் உங்களுக்கு
மீண்டும் ரம்யமாகிவிடும்

நீங்கள் மிதித்துகொண்டிருக்கும் மென் புற்கள்
வேதனையுறுகின்றன.  அதில் உறங்கிகொண்டிருந்த
புழு இறந்துவிட்டது

நகர்ந்து கொள்ளுங்கள்

புற்கள் பனிக்காற்றில்
மெல்லத் தலைநிமிரும்
ஆனாலும் அவற்றின் மீது படிந்திருக்கும் சேறு
இறுகத்தொடங்கும்


Comments

Popular posts from this blog

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும் அருகிலிருக்கும் ஆபத்து மதிமயக்கும் மாயா பணம் உறிஞ்சும் அட்டை  குணம் மாற்றும் நெருப்பு குடிதாக்கும் இடி தீண்டல் அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம் அவள் அரவணைப்பில் மீளாச் சிலரும் என் சிநேகம் பேய்வீட்டில் வாழநேர்ந்த மருமகள்போல தமிழ்த்திருநாட்டில் குடிக்காதவர்கள் ஒவ்வொருநாளும் அவளைக் கண்டும் காணாத ரிஷிபோலக் கடக்கையில் தெய்வப் பிரசாதம் என தருகிறார்கள் ஒருமடக்குச் சாராயம் வா விஸ்வாமித்ரா என உள்ளும் புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை எனக்குள்.