Skip to main content

வாழும் நாகம்

அக்ரகார தெருன்னு பெயரே தவிர, ரெண்டு வீட்டுலதான் அய்யிருங்க இருந்தாங்க. அதுலயும் ஒரு வீட்டுல இருந்த ரங்கு பாட்டி செத்தப்புறம் கொள்ளிபோட்டுப் போனவங்கதான். பெரிய வீடு பாழாகி ராஜநாகம் குடியிருக்கு.

அந்த நாகம் பூமிக்கு கீழே பொந்து வழியா வீடு விட்டு வீடு போகும், வரும். சூட்டுக்காக அடுப்படிக் கீழே படுத்துக் கிடக்கும். அதுக்கு வயசு அதிகம். வீட்டு மனுசாளை ஒன்னும் பண்ணாது. பாழான வீட்டுல எலிபிடிக்க அலையும்.

படையபுரம் அய்யிருங்க, நிலத்தை விட்டுப் பொழைப்பு தேடி கிளம்புறது நாலைஞ்சு வருசமாவே அதிகமாயிடுச்சி. கணக்குபிள்ளை உத்தியோகம் பார்த்துக்கிட்டுருந்த கிட்டு அய்யிரு, உங்ககிட்டப் பேரச் சொல்லிட்டனே தவிர அவருப் பேரை அந்தத் தெருவுல வாய்விட்டு சொல்ல முடியுமா, வேலை போயி, வீட்டுத் திண்ணையில முடங்கின பின்னாடியும் கூட அதிகாரம் ஆகாசத்தைப் பிளக்கும். அவரோட வூட்டுல பைத்தியம். கட்டும்போது நல்லாத்தான் இருந்திச்சு. இவரு மைனரு ஆட்டம் போட்டு, ஊர் பொம்பிளைகளைத் தகராறு பண்ணிக்கப் போயி, அதுக்கு நிம்மதி போச்சு. ஆரம்பத்துல நடிக்கத்தான் செஞ்சுச்சாம். பின்னாடி நிசமாவே கிறுக்குபிடிச்சி போச்சு.

அவரு வீட்டுல அம்சமா ஒரு பசுமாடு இருக்கும். லெட்சுமி அதோட பேரு. பெருசாக் கறவை கிடையாதுன்னாலும் புருஷன் பொஞ்சாதிக்கு மிஞ்சினதில், கொஞ்சம் விலைக்கும் ஊத்துவாரு. கொழந்த இருக்கற வீட்டுல தேடி வந்து வாங்குவாங்க. நான்தான் பால் கறக்கப் போவேன். அந்தம்மா, நல்லா இருந்தப்போ பருத்திக் கொட்டை ஊறபோட்டு, இட்லிக் கல்லுல அதுவே ஆட்டி, மசிச்சி மாடுகளுக்கு வைக்கும். புண்ணாக்கு ஊறப்போட்டு, அதுல அரைச்ச பருத்திகொட்டைக் கலந்து வைக்கும். வெறும் புல்லும், வைக்கோலும் தின்னு வளந்த என் வீட்டு மாட்டை விட இவங்க வீட்டு மாடுங்க அழகா இருக்கக் காரணம் அதுதான்.  இப்போ இங்கே ஒத்த மாடு லெட்சுமியும், அது போட்ட கன்னு வெள்ளியும்தான் கொட்டாயில மிஞ்சிக் கிடக்கு.  ஆனாலும், கறவையில் இதைவிட மூணுபங்கு அதிகம் கறக்குற மாடுங்க என்னுது.

இந்தம்மா, என்னா மனுசி!  மாட்டுக்காக மணிகணக்காக் கல்லு ஆட்டி, பருத்திகொட்டை ரெடி பண்ணும். இவரு எங்கனா மணியாட்ட போய்க் கொட்ட நசுங்கி வருவாரு. என் மாடுங்க கறவைக்குக் கத்துற முன்னாடி கிட்டு ஐயிரு வீட்டு மாட்டைக் கறந்துடலாம்னு போனேன். அவங்க காபியிலே கண்ணு முழிக்கிற ஆளுங்க. பாத்திரமும், வெளக்கெண்ணையும் கொல்லைப் படிகட்டுல காணோம். அய்யிரே என்று ரெண்டுதரம் குரல் கொடுத்த பின்னாடி அந்தம்மா வந்திச்சு. சாமி வந்தவ நடக்குற நடை. இடுப்புச் சிறுத்து, மாருப் பெருகி அம்மனாட்டம் வருது. கன்னத்துலப் போட்டுக்கலாம். அப்படி ஒரு கலை.

கறந்து வச்சிட்டுப் போய்டாத, குரல் கொடு-ன்னுது. பால் ஏனத்துல கொஞ்சம் தண்ணி விட்டுகிட்டு கறக்க ஆரம்பிச்சேன். பாதி நிறைஞ்சதும் கன்னுக்குட்டி அவுத்துப் பால் குடிக்க விட்டேன். அஞ்சு நிமிசம், கன்னுகுட்டிய கட்டிட்டு, பாத்திரம் நிறையிர அளவுக்குப் பாலை கறந்து முடிச்சேன். திரும்பக் கன்னுகுட்டிய அவுத்துவிட்டுடு, 'யம்மா, பாலு இந்தா' என்றதற்கு 'உள்ள வா"ன்னுச்சு.

உள்ளேன்னா, மித்தம் வரைக்கும் போலாம். கொல்லைபடித் தாண்டினால் சின்னதா நடை இருக்கும். பிறகு மித்தம். செவலை பொண்டாட்டி பாத்திரம் தேய்க்க வரும். வீட்டுக்குள்ளேயே அடிபம்புத் தண்ணி. கொடுப்பினைதான். அடிபம்புப் பக்கத்துலேயே குளிக்கிற ரூம்பு. அங்கதான் நின்னுகிட்டு இருந்துச்சி ஐயிரு பொண்டாட்டி அம்மணமா. முதுகுதான் தெரிஞ்சிச்சு. ஆனாலும், சந்தனக் கட்டைல தங்கம் பூசுனாப்ல, அப்படி ஒரு நேக்கு, பளபளப்பு. என்னம்ம்மா என்றபோதே ஆயிரம் யோசனை, நாக்கடியில தித்திப்பு.

ஒரே சூடுடா.... அந்த விளக்கெண்ணெய் எடுத்து முதுகுல சூடு பறக்க தெய்ச்சிவிடு-ன்னுச்சு. தேய்ச்சேன், ஐயிரு எங்கேன்னு கூடக் கேக்கலை. ரூம்பு எதிர் செவுத்துலக் கையை ஊனிகிச்சு. அலுத்தித் தேய்-னுச்சி.  உடம்பு சூடு எங்கை வழியா எனக்குள்ள பரவி கிளர்ந்து நின்னேன். எண்ணை கோடா வழிஞ்சு அதுங்காலுல இறங்குது. ஒவ்வொரு தேய்ப்புக்கும் தேகம் சொக்கபனை போல ஆயிட்டு.

சட்டுன்னு... போதும் போ-ன்னுச்சு. என்னா வியாதியோ, என்னா வைத்தியமோ.  தப்புபண்ணினவன் மாட்டக்கூடாத கணக்கா, கை எண்ணையைக் கூடக் கழுவாம ஓடியாந்தேன்.

மறுநாள் சேவக்கூவுற நேரமிருக்கும்.  வைக்கப்போரில், வைக்கபிரி திரிக்கும் போது கவனிச்சேன். அய்யிரம்மா கோலம் போடுது, நெளி நெளியா சுருண்டு சுருண்டு மையத்தில் படம்விரிஞ்ச நாகக் கோலம்.

Comments

Popular posts from this blog

பிறழ்வு - கதை 3

கட்டிடம் நான்காவது மாடியாக வளர்ந்து கொண்டிருந்தது. எலும்புக் கூடு நிற்பதைப் போல மொத்தமாக சிமென்ட் தூண்களும் தளங்களும் மட்டும் முடிந்திருந்தன. அடிப்படை கட்டுமான வேலைகளை முடித்துவிட்டுதான் சுவர் கட்டத்தொடங்குவது என்பது முடிவு. செங்கற்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவு இல்லாவிட்டலும், அடுத்த மாதங்களில் இன்னும் விலையும் தட்டுப்பாடும் குறையலாம் என்பதால் இன்னும் சுவர்வேலைகளை தொடங்கவில்லை தண்ணீர்விட்டுத் தேக்கியிருந்த தளத்தில் நிற்பது நன்றாக இருந்தது. அந்தி சூரியன் நகரின் பின்புலத்தில் தன் வர்ணஜாலங்களை தொடங்கியிருந்தான். மனப்பாடமாக இருந்த ஆதித்யஹிருதய பாடல்களை, ஒன்றிரண்டுதான் தெரியும். சொல்லத் தொடங்கினேன். எதிரிகளை சமாளிக்க இந்த ஸ்லோகங்கள் உதவும் என்று மோகன் கேட்டுக் கொண்டே இருப்பான். கட்டிட பொருட்கள் வாங்க சீனா போயிருக்கிறான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, ஆனாலும் ஸ்லோகத்தில் இருந்த வசீகரத்திற்காக சொல்வேன். வேலையாட்கள் தரைதளத்தில் மோட்டாரை இயக்கிவிட்டு உடல் கழுவிக் கொண்டிருந்தார்கள். சூர்யதாசுக்கு நாளைய வேலைகளை ஒப்படைக...

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்